ஒமைக்ரான் பரவல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.
ஒமைக்ரான் பரவல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
Published on

சென்னை,

உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

ஒமைக்ரான் பரவல் மேலும் அதிகரிக்காத வகையில் அதை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு திட்டங்களை தீட்ட முன்வந்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இன்று காலை 11 மணியளவில் இந்த கூட்டம் தொடங்குகிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் என்னென்ன மேற்கொள்ளலாம்? புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? பள்ளி கல்லூரி மாணவர்களிடையே ஒமைக்ரான் பரவாமல் தடுப்பதற்கு அறிவிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் ஆகியவை பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் புதிய முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com