ஒமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் முதற்கட்டமாக 275 படுக்கைகள் தயார்

ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் முதற்கட்டமாக 275 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் முதற்கட்டமாக 275 படுக்கைகள் தயார்
Published on

சென்னை,

கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வழக்கமான கொரோனா தொற்றைக் காட்டிலும் அதி தீவிரமாக பரவக் கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் இந்த ஒமைக்ரான் வைரஸ் கருதப்படுகிறது.

இதனால் இந்தியா மற்றும் தமிழகத்திலும் தொற்று பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மற்றொரு புறம் மாநிலத்துக்குள்ளும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தமிழகத்தில் ஒமைக்ரானை எதிர்கொள்ளத் தேவையாக இருக்கும் முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவினால் அதனை எதிர்கொள்ள பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 150 படுக்கைள் ஒதுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4-வது தளத்தில் முதற்கட்டமாக 150 படுக்கைகள் தயார் செய்து ஒதுக்கப்பட்டுள்ளது.

275 படுக்கைகள் தயார்

அதேபோல் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 75 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் 15 ஐ.சி.யு படுக்கைகள், 35 பொது படுக்கைகளும் என மொத்தமாக 275 படுக்கைகள் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், கிண்டி கொரோனா ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் பல கொரோனா படுக்கைகள் காலியாக கிடப்பதால், தேவைப்படும் நேரத்தில், அவற்றை ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒமைக்ரான் வைரஸ் வீரியமிக்கதாக இருக்கும் என தெரிவிக்கப்படுவதால், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களை பல்வேறு ஆஸ்பத்திரிகளில் வைத்து சிகிச்சை அளிப்பதை காட்டிலும், பாதிக்கப்படும் நபர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்தால், மேலும், தொற்று பரவுதல் தடுக்கப்படும் என டாக்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com