தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு.!

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை,
சென்னையில் வேலை பார்த்துவரும் வெளியூரை சேர்ந்த மக்கள், பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், பள்ளி அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறை வரவுள்ளது. இதையொட்டி, மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். பலர் ரெயில்களிலும், பேருந்துகளிலும் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தொடர் விடுமுறையையொட்டி, மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ரூ.1,900 முதல் ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல, சென்னையில் இருந்து கோவை செல்ல ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையும், நாகர்கோவில் செல்ல ரூ.2,500 முதல் ரூ.4,500 வரையும், நெல்லை செல்வதற்கு ரூ.2,000 முதல் ரூ.4,500 வரையும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.






