

தமிழக சட்டசபை தேர்தலில் 'மெகா' கூட்டணியுடன் களம் இறங்கும் ஆளுங்கட்சியான தி.மு.க., இந்த முறையும் வெற்றிக் கனியை பறித்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 170 இடங்களில் தி.மு.க. போட்டியிட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 64 தொகுதிகளையே கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்க திட்டமிட்டுள்ளது.
வேட்பாளர்கள் தேர்வில் கூடுதல் கவனம்:
ஒரு பக்கம் கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை நடத்தி வரும் தி.மு.க. தலைமை, மற்றொரு புறம் தங்கள் கட்சி வேட்பாளர்கள் தேர்விலும் வேகம் காட்டி வருகிறது. அதுவும் இந்த முறை வேட்பாளர் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதாவது, தொகுதி மக்களின் நற்சான்றிதழுடன், 50 சதவீதத்திற்கு மேல் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே போட்டியிட மீண்டும் வாய்ப்பு என்பதில் தி.மு.க. தலைமை உறுதியாக உள்ளது.
200 தொகுதிகள் வெற்றி இலக்கு:
சட்டசபை தேர்தலில் 200 இடங்களில் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கும் தி.மு.க., தகுதியான வேட்பாளர்களை மட்டுமே தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. அந்த வகையில், தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவு செய்தவர்கள், நிதியை செலவிடாமல் அலட்சியம் காட்டியவர்கள் என பட்டியல் தயாரித்துள்ளதாம். அதேபோல், தொகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், கட்சி தொண்டர்களிடம் நல்ல பெயர் வாங்காமல், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியவர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
வெற்றி வாய்ப்பு எப்படி?
கடந்த 5 ஆண்டுகளில் சட்டசபை நடைபெற்ற 161 நாட்களில், அதிக நாட்கள் பங்கேற்று தொகுதி பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு மட்டுமே, மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல், தற்போதைய எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பது குறித்து 'சர்வே' எடுக்கப்பட்டு கட்சி தலைமைக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.
வேட்பாளர் பட்டியலில் அதிரடி மாற்றம்:
அதில், தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் 60 பேருக்கு வெற்றி வாய்ப்பு 50 சதவீதத்திற்கும் கீழ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதனால், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்று தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால், தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.