

சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆளுகின்ற இந்த துரோக அரசை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அத்தொகுதி மக்கள் தோற்கடித்த காரணத்தால் ஆர்.கே.நகர் தொகுதி மீதும், தொகுதி மக்கள் மீதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு தனது வஞ்சத்தை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
அரசு நிர்வாகத்தின் மூலமாகவும், காவல் துறையின் மூலமாகவும் பழனிசாமி அரசு மேற்கொள்ளும் இந்த பழிவாங்கும் போக்கு மிகவும் கீழ்த்தரமானது.
ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் இப்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.
தமிழரசன் என்ற மீனவர் கடலில் மீன் பிடித்துவிட்டுவந்து, தனது படகின் பராமரிப்பு வேலை மேற்கொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டும், அவர் மீது அராஜக போக்கை கட்டவிழ்த்துவிட்டதால் அச்சத்தில் அவர்களிடம் இருந்து விடுபட முயன்ற தமிழரசன் படகில் மோதி, தலையில் பலத்த காயமடைந்து கடலில் விழுந்து இறந்துள்ளார்.
அவரின் 2 குழந்தைகளும் ஆதரவில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் இச்சூழலில், அவர் விபத்தில் இறந்ததாக அவரது குடும்பத்தை மிரட்டி எழுதிவாங்க காவல்துறை முயற்சி செய்கின்றனர்.
காவல்துறையினர், எடப்பாடி பழனிசாமியின் அரசு தூண்டுதல் பேரில் தொடர்ந்து இப்படிப்பட்ட கொடுஞ்செயல்களை தொடர்வார்களேயானால், நீதிமன்றத்தின் மூலம் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.