தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் 4 பேர் காயம்; விசைப்படகு சேதம்

கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கினார்கள். மேலும் அவர்களுடைய விசைப்படகையும் சேதப்படுத்தினார்கள். இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் காயம் அடைந்தனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் 4 பேர் காயம்; விசைப்படகு சேதம்
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து அந்த பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 25), குட்டியாண்டி (25), ராசு (65), மனோகர் (36), ஆனந்த் (48) ஆகிய 5 பேரும் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் 25 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், கார்த்திக் உள்ளிட்ட 5 பேரும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி அவர்களை கம்பி, கயிறு மற்றும் ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

மேலும் இலங்கை கடற்படையினர் தங்களது படகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் விசைப்படகின் மீது மோதினர். இதில் படகு சேதம் அடைந்தது. பின்னர் இலங்கை கடற்படையினர் மீனவர்கள் வைத்திருந்த மீன்களை எடுத்துக்கொண்டு, மீனவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர்.

இலங்கை கடற்படையினர் தாக்கியதில் குட்டியாண்டியை தவிர மற்ற 4 மீனவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து மீனவர்கள் மீனவ சங்க நிர்வாகிகளுக்கும், கடலோர காவல் குழுமத்தினருக்கும் தகவல் கொடுத்துவிட்டு கரைக்கு வந்தனர்.

இதைத்தொடர்ந்து காயம் அடைந்த 4 மீனவர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் குழுமத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com