

சென்னை,
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு முதல், சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தமிழ் அறிஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளன்று அவரைப் போற்றி வணங்குவதாக தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் ஆர்வமூட்டிய தினத்தந்தியின் நிறுவனர், இதழியல் முன்னோடி, பத்திரிகையாளர், தமிழ்ப்பற்றாளர், அரசியல்வாதி, வழக்கறிஞர் என பன்முகம் கொண்ட திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினத்தில் அவரது தமிழ்ப்பற்றையும் நாட்டுப்பற்றையும் போற்றி வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.