

சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தர்மபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞன் இளவரசன் அதே ஊரைச் சேர்ந்த திவ்யா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதையொட்டி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த சம்பவத்திற்குப் பிறகு இளவரசன் மர்மமான முறையில் ரெயில் தண்டவாளத்துக்கு அருகில் இறந்து கிடந்தார். அவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் எனக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவரது உடலை நேரில் பார்த்தவர்கள் அது தற்கொலையாக இருப்பதற்கு வாய்ப்பில்லை, அவர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை எழுப்பினர்.
அதனடிப்படையில் அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் நீதிபதி சிங்காரவேலு ஆணையம் அமைக் கப்பட்டது. அது 5 ஆண்டுகள் விசாரணை செய்து 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 9 மாதங்கள் கடந்த பிறகும் தமிழக அரசு அதை வெளியிடவில்லை.
இந்தநிலையில் அந்த அறிக்கையின் இறுதிப் பகுதி வெளியாகி இருக்கிறது. அதைப் பார்த்து பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களுக்காகக் குரல் எழுப்பிய ஜனநாயக சக்திகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிங்காரவேலு ஆணையத்தின் முழுமையான அறிக்கையைப் பொதுமக்களுக்கு வெளியிடாமல் தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பதற்குக் காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே மக்களின் பயத்தைப் போக்கவும் குழப்பத்தை தீர்க்கவும் சிங்காரவேலு ஆணையத்தின் முழுமையான அறிக்கையை காலந்தாழ்த்தாமல் தமிழக அரசு வெளியிட வேண்டும். அந்த அறிக்கையின் பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.