

வேலூர் ,
தமிழக அரசின் தலைமை ஹாஜி மவுலவி முப்தி சலாகுதீன் முகம்மது அயூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமிய மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் பிறை நேற்று தென்படவில்லை. எனவே இந்த ஆண்டின் ரம்ஜான் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்றும், நாளையும் மாவட்டத்தில் உள்ள அனைத்து துணிக்கடைகள் மற்றும் ரெடிமேட் ஷோரூம்கள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட உள்ளது.
சமூக விலகல் மற்றும் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விதிமுறையை மீறி செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.