

தேனி அருகே உள்ள வீரபாண்டியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா. இவர்கள் இருவரும் கேரளாவில் இருந்து வீரபாண்டிக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை தாமரைக்கண்ணன் ஓட்டினார். போடிமெட்டு மலைப்பாதையில் புலியூத்து அருகே 5-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது. போடியில் இருந்து கேரளாவுக்கு கற்கள் ஏற்றிசென்ற டிப்பா லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தாமரைக்கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த குரங்கணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாமரைக்கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அர்ச்சனைவை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.