சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

புத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்
Published on

சென்னை,

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் புத்தாண்டு வரவை கொண்டாடுவதற்காக 31ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு காமராஜர் சாலை மற்றும் பெசன்ட் நகர் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதை முன்னிட்டு, தடையில்லா வாகன போக்குவரத்து, விபத்தில்லா புத்தாண்டை உறுதிசெய்வதற்காக சென்னை போக்குவரத்து காவல் துறையினரால் விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள அனைத்து வழிகளும் 31ந்தேதி இரவு 9 மணி முதல் சாலை தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு வாகனங்கள் கடற்கரை உட்புறச்சாலையில் நுழையாமல் தடைச்செய்யப்படும்.

கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக வெளியே செல்வதற்கு இரவு 9 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். அதன் பிறகு கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கத்திற்கு பின்புறம் மட்டுமே வெளியேற்றப்படும்.

காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரையில் அன்றிரவு 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

காமராஜர் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்திநகர், சுங்குவார் தெரு, பாரதிசாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை ஆகிய சந்திப்புகளில் சாலை தடுப்புகள் கொண்டு வாகனங்கள் நுழையாதவாறு தடுக்கப்படும். ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வாலாஜா முனை சந்திப்பிலிருந்து போர் நினைவு சின்னம் நோக்கி வரும் வாகனங்கள் இரவு 9 மணி முதல் கொடிமர சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு அண்ணா சாலையை சென்றடையலாம்.

டாக்டர் ராதாகிருஷ்னன் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, ஆடம்ஸ் சாலை, கொடிமரத்து சாலை, போர் நினைவு சின்னம் ஆகியவற்றிலிருந்து வரும் வாகனங்களை காமராஜர் சாலைக்கு இரவு 9 மணி முதல் அனுமதிக்கப்படமாட்டாது. அந்த வாகனங்களை வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திக்கொள்ளலாம்.

அடையாரில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மியூசிக் அகாடமி வழியாக அண்ணா சாலை சென்றடையலாம். காரணீஸ்வரர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலையை நோக்கி செல்ல அனுமதிக்காமல் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.

வடக்கிலிருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் இரவு 10 மணி முதல் வடக்கில் கொடி மரசாலை வழியாக திருப்பிவிடப்படும். அந்த வாகனங்கள் அண்ணாசாலை, வெல்லிங்டன் சாலை, ஜி.பி. சாலை வழியாக அடையாறு செல்லலாம். எந்த வாகனங்களும் லூப்ரோடு வழியாக காமராஜர் சாலைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது, சீனிவாசபுரம் சந்திப்பு வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும்.

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6வது அவென்யூவில் 31ந்தேதி இரவு 9 மணி முதல் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது. பெசன்ட் நகர் 6வது அவென்யூ இணைப்பு சாலைகளான 5வது அவென்யூ, 4வது பிரதானசாலை, 3வது பிரதானசாலை, 16வது குறுக்குதெரு ஆகிய பகுதிகள் தடுக்கப்படும்.

மகாத்மா காந்தி சாலை, 7வது அவென்யூ சந்திப்பில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com