

தேனியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் சைக்கிள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியை தேனி புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தொடங்கி வைத்தார். 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரம், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரம், 15 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரம், அதே வயது பிரிவுகளில் மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரம் என போட்டிகள் நடந்தன. இதில் 155 மாணவர்கள், 90 மாணவிகள் என மொத்தம் 245 பேர் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி வழங்கினார். இதில் ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.250 வீதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.