

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு நெல், திராட்சை, வாழை, காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இவ்வாறு சாகுபடியாகும் காய்கறி, வாழை, திராட்சை பழங்களை அறுவடை செய்வதற்காக தோட்ட தொழிலாளர்கள் வருகின்றனர்.
அறுவடைக்கு தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் வந்து செல்கின்றனர். அப்போது அவர்கள் வாகனங்களின் பின்புற கதவை திறந்து அதில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் பல்வேறு விபத்துகள் நடந்து உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.