உலக தண்ணீர் தினத்தன்றுகுழாய்களில் இருந்து வீணாக ஓடிய குடிநீர்

உலக தண்ணீர் தினத்தன்று குழாய்களில் இருந்து வீணாக குடிநீர் ஓடியது.
உலக தண்ணீர் தினத்தன்றுகுழாய்களில் இருந்து வீணாக ஓடிய குடிநீர்
Published on

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கள்ளிப்பட்டி-கோபி செல்லும் ரோட்டில் அடுத்தடுத்து 2 குடிநீர் குழாய்கள் உள்ளன. வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகளின் குடிநீர் தாகத்தை போக்கும் விதமாக இந்த குடிநீர் குழாய்கள் கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம் ஊராட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 குடிநீர் குழாய்களின் திருகுகளும் கழன்றுவிட்டதால் கடந்த சில நாட்களாக தண்ணீர் வீணாக ரோட்டில் வழிந்தோடுகிறது.

அந்த வழியாக செல்பவர்கள் தண்ணீர் வீணாவதை பார்த்து குச்சிகளையும், துணிகளையும் வைத்து அடைத்து விட்டு செல்கிறார்கள். ஆனால் தண்ணீரின் வேகம் காரணமாக சிறிது நேரத்திலேயே மீண்டும் குழாய்களில் இருந்து தண்ணீர் பீறிட்டு பாய்கிறது. நேற்று உலக தண்ணீர் தினம். பல்வேறு இடங்களில் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் மக்களுக்கு பயன்படவேண்டிய மகத்தான குடிநீர் இப்படி வீணாகலாமா? என்று அந்த வழியாக செல்லும் மக்கள் வேதனை படுகிறார்கள். சம்பந்தப்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் உடனே இந்த 2 குழாய்களிலும் திருகுகள் அமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com