ஒரு கோடி தடுப்பூசி கையிருப்பு: தமிழகத்தில் 49 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடவில்லை

தமிழகத்தில் இதுவரை 49 லட்சம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு கோடி தடுப்பூசி கையிருப்பு: தமிழகத்தில் 49 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடவில்லை
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிலையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தடுப்பூசிக்கு பெரிய தட்டுப்பாடு நிலவி இருந்தது.

தற்போது தமிழகத்தில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை என தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 49 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

1.37 கோடி பேர் செலுத்தவில்லை

தமிழகத்தில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 10 கோடியே 36 லட்சத்து 66 ஆயிரத்து 287 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 40 லட்சத்து 75 ஆயிரத்து 378 பேருக்கு முதல் தவணையும், 4 கோடியே 35 லட்சத்து 88 ஆயிரத்து 112 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.

7 லட்சத்து 7 ஆயிரத்து 951 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 1 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 476 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 49 லட்சத்து 3 ஆயிரத்து 125 பேர் இதுவரை முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

இதைப்போல் ஒரு கோடியே 37 லட்சத்து 61 ஆயிரத்து 938 பேர் 2-வது தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தவில்லை. தமிழகத்தில் 27 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை 4 கொடியே 34 ஆயிரத்து 268 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com