காவல் அருங்காட்சியகம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு; வருகிற 28-ந் தேதி பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்

காவல் அருங்காட்சியகம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு; வருகிற 28-ந் தேதி பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்

சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்ட ஓர் ஆண்டில் இதுவரை மொத்தம் 30 ஆயிரத்து 285 பேர் பார்வையிட்டுள்ளனர்.
Published on

சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமானது கடந்த 28.09.2021 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்ட ஓர் ஆண்டில் இதுவரை மொத்தம் 30 ஆயிரத்து 285 பேர் பார்வையிட்டுள்ளனர்.

காவல் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டு ஓராண்டு நிறைவு நாளினையொட்டி வருகிற 28-ந் தேதி(புதன்கிழமை) தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும், கடந்த 14-ந் தேதி முதல் வருகிற 26-ந் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, விவாதமேடை, மாறுவேடப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், வருகிற 28-ந் தேதி காலை 11 மணியளவில் காவல் வாத்தியக்குழுவின் இசை நிகழ்ச்சியும், பிற்பகல் 3 மணியளவில் மோப்பநாய் கண்காட்சியும் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்க உள்ளனர். நிகழ்ச்சியின் இறுதியாக இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com