

சென்னை,
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் ஜனவரி 1-ம் தேதி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்தார்.
இந்த நிலையில் அதன் முன்னோட்டமாக தமிழகத்தில் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தியது. அதன்படி முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். சோதனை முறையில், நடைமுறை சிக்கல் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
அதன்படி ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் தமிழகத்தில் எந்த நியாயவிலைக் கடையிலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். ஸ்மார்ட் கார்டு அல்லது ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த செல்போன் எண் ஆகியவற்றுள் ஒன்றைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெறலாம்.
தமிழகத்தில் தற்போது 2.5 கோடி ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், 35,233 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.