

சென்னை,
தமிழகத்தில் ஆன்லைன் உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், மின்சார நுகர்வோர்களுக்கு விரைவான சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தும் வசதியும் அடங்கும். தமிழ்நாடு முழுவதும் 2.54 கோடி வீடுகள் உட்பட அனைத்து பிரிவுகளிலும் 3.51 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர்.
இலவச மின்சார பயனாளிகள் போக மாதம் சராசரியாக 1 கோடி முதல் 1.15 கோடி வரை நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்துகின்றனர். செல்போன் பயன்பாடு அதிகரிப்பால் பலரும் அரசு மற்றும் தனியார் துறை சேவைகளுக்கான கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தவே ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் 2025 - 26ல், மின் வாரியத்திற்கு டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தியவர்கள் எண்ணிக்கை, 10.63 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்படி அவர்கள் 62,537 கோடி ரூபாய் டிஜிட்டல் முறையில் செலுத்தியுள்ளனர். இது 2024 - 25ல் 9.56 கோடி நுகர்வோர்களாகவும், செலுத்திய கட்டணம் 58,285 கோடி ரூபாயாகவும் இருந்தது.
இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு, 10 முதல் 15 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஆண்டில் மின் கட்டணம் செலுத்தியதில் டிஜிட்டலின் பங்கு 87 சதவீதம் ஆகும். ஆன்லைனில் இன்னும் புதிய சேவைகள் தொடங்கப்பட உள்ளன. அதன் வாயிலாக எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்று அவர் கூறினார்.