இளம்பெண்ணிடம் ஆன்லைன் மூலம் நூதன மோசடி

சென்னையில் இளம்பெண்ணிடம் ஆன்லைன் மூலம் நூதன மோசடியில் 2 பேரை கைது செய்தனர்.
இளம்பெண்ணிடம் ஆன்லைன் மூலம் நூதன மோசடி
Published on

சென்னை கொளத்தூர், ஜவகர் நகர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், "ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கிய சிலரை தேர்ந்தெடுத்து அன்பளிப்பு வழங்குகிறோம். லேப்டாப், ஐ போன், பிரிட்ஜ், ஓவன், டி.வி. என 5-ல் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அதற்கான இன்சூரன்ஸ் தொகையை செலுத்த வேண்டும். பொருள் உங்கள் கைக்கு வந்தவுடன் அந்த தொகையை உங்களிடம் திரும்ப கொடுத்து விடுவோம்" என ஆசை வார்த்தை கூறினார்.

அதனை உண்மை என நம்பிய இளம்பெண், லேப்டாப் வாங்க விருப்பம் தெரிவித்து அவர்கள் கேட்டபடி இன்சூரன்ஸ் பணமாக ரூ.31 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினார். ஆனால் அதன்பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர்தான் தான் நூதன முறையில் ஏமாற்றப்பட்டதை இளம்பெண் அறிந்தார். இது குறித்து பெரவள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கொளத்தூர் சைபர் கிரைம் உதவி கமிஷனர் ராகவேந்திரா ரவி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிபுல் மலக்கர் (22) மற்றும் கவுஷிக் மண்டல் (22) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com