இணைய வழி சட்ட ஆலோசனை மையம்

ஊட்டியில் இணைய வழி சட்ட ஆலோசனை மையத்தை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் திறந்து வைத்தார்.
இணைய வழி சட்ட ஆலோசனை மையம்
Published on

ஊட்டி

ஊட்டியில் இணைய வழி சட்ட ஆலோசனை மையத்தை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் திறந்து வைத்தார்.

சட்ட உதவி

நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இணைய வழி சட்ட ஆலோசனை மையம் ஊட்டி கோர்ட்டில் தொடங்கப்பட்டு உள்ளது. இதை சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான அப்துல் காதர் நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் வெகுதொலைவில் உள்ளவர்கள், நீதிமன்றத்தை சுலபமாக அணுக இயலாதவர்கள் சட்ட உதவி பெறும் வகையில் இணைய வழி சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. புதிதாக வழக்கு தொடுக்க அல்லது ஏற்கனவே தங்களுக்கு எதிராக தொடுக்கபட்ட வழக்கை எதிர்கொள்ள வக்கீல் வைக்க வசதி இல்லாதவர்கள் இந்த அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

சமரச தீர்வு

இதன்மூலம் குடும்ப பிரச்சினை, சொத்து பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து சட்ட ஆலோசனை பெறவும், சமரச முறையில் தீர்வு காணவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மேலும், அரசின் சலுகைகளை பெறவும், அரசின் பிற துறைகளில் உள்ள பிரச்சினைகளுக்கு சமரச முறையில் தீர்வு காணவும் சட்ட ஆலோசனை மையம் வழிவகை புரியும். இதுதொடர்பாக அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்தை அணுகலாம். இதற்காக அலுவலகத்தில் உள்ள வக்கீல்கள், பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதில் சார்பு நீதிபதி ஸ்ரீதரன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் லிங்கம், நீதிபதி ஸ்ரீதர் மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com