ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் இயற்றப்படும் - புதுச்சேரி சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் அறிவிப்பு

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று புதுச்சேரி சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் இயற்றப்படும் - புதுச்சேரி சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் அறிவிப்பு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா தாக்கல் செய்து பேசியதாவது:- சுற்றுலா மற்றும் ஆன்மீகத்திற்கு புகழ்பெற்ற புதுவை மாநிலத்தில் சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த விளையாட்டில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மூழ்குவதும், அதன் காரணமாக பணத்தை இழந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டுக்களை வீடுகளில் இருந்து தான் விளையாடுகிறார்கள்.

அதை 'கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் 'ஆப்பிள் ஆப் ஸ்டோர்' ஆகியவை தான் கண்டறிய முடியும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தமிழக முதலமைச்சர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தார். அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றி, அந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் உத்தரவை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இருந்து சென்றால் மட்டுமே அந்த விளையாட்டுக்களை தடை செய்யும் நிலை உள்ளது. எனவே புதுவை மாநிலத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது சம்பந்தமாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் அதனை அரசின் தீர்மானமாக இயற்றி, கவர்னர் ஒப்புதலோடு, மத்திய அரசிற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், சம்பத், செந்தில்குமார், கென்னடி ஆகியோரும் பேசினர். தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், இளைஞர்கள் நலனை காக்க ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை அவசியம். இதை அரசு தீர்மானமாக கொண்டுவர பா.ஜனதா ஆதரவு தெரிவிக்கும் என்றார்.

தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பதலளித்து பேசியதாவது:-

ஆன்லைன் தடை சட்டத்திற்கு தடை கொண்டுவர மாற்று கருத்து இல்லை. கடந்த 11.6.2022-ல் இதுதொடர்பான தமிழக அரசு சட்டம் கொண்டுவர உள்ளது என்ற தகவல் வெளியானபோதே சட்டத்துறையிடம் விவாதம் நடத்தினோம். மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ, சம்பத் முன்மாதிரி சட்டத்தை அளித்திருந்தார். அதில் உள்ள சாரம்சங்களையும் பரிசீலித்துள்ளோம்.

காவல்துறை, வருவாய்த் துறைக்கும் கருத்து கேட்டு அனுப்பியுள்ளோம். தற்போது தடை சட்டம் சட்டத்துறையின் வசம் உள்ளது. அமைச்சரவை ஒப்புதல் பெற்று புதுவை சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்படும். அப்போது எம்.எல்.ஏ.க்கள் பிரிவு வாரியாக சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

பொதுவாக மாநில அரசுகள் தண்டனை சட்டத்தை நிறைவேற்றினால் அதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கான ஒப்புதல் பெறவும் மத்திய அரசை அணுகியுள்ளோம். இதனால் புதுவையில் விரைவில் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த தடை சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com