ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றம்..!

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றம்..!
Published on

சென்னை,

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் தாக்கல் செய்தார். கவர்னர் திருப்பிய அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதனையடுத்து கவர்னர் திருப்பிய அனுப்பிய கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது "இதயமுள்ளவர்கள் யாருக்கும் இந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது. சட்ட ஒழுங்கை பேணுவதும்,மக்களை பாதுகாப்பதும், மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை. மாநில எல்லைக்குள்ள மக்கள் அனைவரையும் காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. ஆன்லைன் சூதாட்ட அநியாயம் தொடராமல் இருக்க, இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன் , மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா , காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் , ஓ.பன்னீர் செல்வம், விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியதாக சபநாயாகர் அப்பாவு அறிவித்தார். இதன் மூலம் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com