சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் மட்டும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி

மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்படி சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் மட்டும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுற்றுச்சூழலை பாதுகாக்க

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதல்களின்படி www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ள மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

பிளாஸ்டிக் அனுமதி இ்ல்லை

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த அனுமதி இல்லை.

நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் வகையில் வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சிலைகள் கரைக்கப்படும் இடங்கள்

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள அரகண்டநல்லூர் ஏரி, சங்கராபுரம் ஏரி, உளுந்தூர்பேட்டை ஏரி, திருநாவலூர் ஏரி, கோமுகி அணை ஆகிய இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். சூற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகசதுர்த்தி விழாவை பொதுமக்கள் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com