பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தே.ஜ. கூட்டணி ஆட்சியால் மட்டுமே முடியும் - அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனை ஆதரித்து அண்ணாமலை இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தே.ஜ. கூட்டணி ஆட்சியால் மட்டுமே முடியும் - அண்ணாமலை
Published on

கோவை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் வானதி சீனிவாசனை ஆதரித்து அண்ணாமலை இன்று பிரசாரம் மேற்கொண்டார். இது தொடர்பாக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தீயசக்தி திமுக நடத்திய மோசமான ஆட்சியை விரட்டியடிக்கவும், மக்கள் நலன் காப்பதையே கொள்கையாக கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையவும், இன்றைய தினம், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அக்கா வானதி சீனிவாசனை ஆதரித்து தீயணைப்பு நிலையம், கண்ணப்பா நகர், புதுப்பாலம், தயிர் இட்டேரி, சம்பத் நகர் வீதி, ரத்தினபுரி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

கையாலாகாத திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருக்கிறார்கள். அந்த நிலையை மாற்றி பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியால் மட்டுமே முடியும்.

திமுகவை உருவாக்கிய அண்ணாவின் குடும்பம் எங்கே இருக்கிறது என்றே தெரியாத அளவிற்கு, ஒரே குடும்பம் தான் கட்சியையும், தமிழகத்தையும் நான்கு தலைமுறைகளாக சுரண்டி கொண்டிருக்கிறார்கள். நமது தமிழகத்தை திமுகவின் ஒரே குடும்பம் சுரண்டி கொள்ளையடிப்பதை இனியும் அனுமதிக்க முடியாது. தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், எழுச்சிக்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்திட வேண்டும்.

வரவுள்ள 23 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இதுவரை திமுக சந்திக்காத மோசமான தோல்வியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் பரிசளிப்பார்கள் என்பது உறுதியாகிவிட்டது. அதுவே, திமுகவின் இந்த கையாலாகாத ஆட்சி நிர்வாகத்திற்கு தகுந்த பதிலாக இருக்கும். எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! கோவை மென்மேலும் வளரட்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com