

புதுடெல்லி,
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியான நிலையில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெறுவதற்கு வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து முடிவு செய்ய சம்பந்தப்பட்ட கட்சியினர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு த.வெ.க.வுக்கு மட்டுமே உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
“அ.தி.மு.க.வுக்குத் தேவையான ஆதரவு கிடைக்கப் போவதில்லை. ஏனென்றால் மக்கள் வாக்களித்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களை வேறு எங்கிருந்தும் வரவழைக்க முடியாது.
விஜய்யை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பதை உறுதிசெய்வதற்கு வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். எங்கள் மதிப்பீட்டின்படி, சட்டமன்றம் கூடும்போது பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு த.வெ.க.வுக்கு மட்டுமே உள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளது.