

நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமும், பூண்டு சாகுபடியும் பிரதானமாக உள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் விளைநிலங்களை பதப்படுத்தி 3 ஆயிரம் ஏக்கரில் பூண்டு சாகுபடி செய்து வருகின்றனர்.
நீலகிரியில் விளையும் பூண்டு அதிக காரத்தன்மை, மருத்துவ குணம் உடையது. இதனால் இந்திய அளவில் சந்தையில் தனி மவுசு உள்ளது. ஊட்டி, கோத்தகிரி, பாலாடா சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் முதல் போகமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும், 2-ம் போகமாக ஏப்ரல், மே மாதங்களிலும் பூண்டு பயிரி டுகின்றனர். நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பூண்டு மேட்டுப்பாளையம் மண்டியில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் முதல் தர பூண்டு கிலோ ரூ.250-க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் இருமடங்காக உயர்ந்து அதிகபட்சமாக கிலோ ரூ.500 முதல் ரூ.550 வரை விற்பனையானது. கொள்முதல் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
முதல் போகத்தில் அறுவடை செய்யப்படும் ஊட்டி பூண்டு சமையல் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. 2-ம் போகத்தில் பூண்டு விதைக்காக பயன்படுத்தப்படுகிறது. நீலகிரி பூண்டுகளை விதைக்காக பெரும்பாலும் பயன்படுத்துவதால், 2-ம் போகத்தில் அறுவடை செய்யப்படும் பூண்டு விதைகளை இந்தியா முழுவதிலும் இருந்து விவசாயிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.
தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் ஊட்டி பூண்டு உச்சபட்சமாக ரூ.550-க்கு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங் களில் இருந்து பூண்டு விதை வாங்க ஏராளமான வியாபாரி கள் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு வருவதால், ஊட்டி பூண்டின் கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது. வரத்து குறைவாக இருப்பதால், விலை அதிகமாக உள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இந்த விலை நீடித்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.