

சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் என்பது, நம் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட மிகக் கொடுமையான, மனிதத்திற்கே எதிரான போர். பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்பதை #ஆபரேஷன் சிந்தூர் திடமாக நிரூபித்துள்ளது. "நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்" என்று தெளிவாக வரையறுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பின்றி, பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்த்தெறிந்து, "ஆபரேஷன் சிந்தூரை" வெற்றிகரமாக முடித்த நம் இந்திய இராணுவப் படையின் தீரம் பெருமைக்குரியது. இத்தீரமிகு பதிலடியை முன்னின்று அளித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசுக்கு அதிமுக சார்பில் வாழ்த்துகள்.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத நிலைகளில் இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலுக்கு என் பாராட்டுகள். பிரதமர் மோடி தலைமையின்கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. வாழ்க, வெல்க தாய்த் திருநாடு என பதிவிட்டுள்ளார்.