

சென்னை,
15-வது சட்டப்பேரவையின் 8-வது கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி வருகிறார்.
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து கவர்னர் விளக்கம் அளித்தார். அப்போது கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து அமமுக எம்.எல்.ஏ தினகரன், தமிமுன் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டசபை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேச அனுமதிக்காததால் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை.
7 பேர் விடுதலைக்கு ஆளுநர் இதுவரை பதில் அளிக்கவில்லை. தமிழகத்தில் வேலைவாய்ப்பு, வளர்ச்சி இல்லை. தமிழகத்தின் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என கூறினார்.