

சென்னை,
மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு அறிவிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
ஆர்ப்பாட்டத்தின்போது கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வருகிறது. இந்தி, சமஸ்கிருதத்தை நாடு முழுவதும் திணித்து வருகிறார்கள். நாடாளுமன்ற, பொதுத்துறை, அரசு நடவடிக்கைகள் இனி இந்தியில்தான் இருக்கும் என்ற நிலையை உருவாக்கி வருகின்றனர்.
நாட்டில் 74 சதவீதம் பேர் பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள். எனவே, இந்திதான் ஆட்சி மொழி, அலுவல் மொழி என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி வரும் நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தனியார் பயிற்சி மையங்கள் லாபம் கொழிக்கவே இதனை செய்கின்றனர். இதனால் ஏழை வீட்டு பிள்ளைகள் பல்கலைக்கழக படிக்கட்டுகளை மிதிக்க முடியாது. மத்திய அரசின் இந்தி திணிப்பு, நுழைவுத் தேர்வை எதிர்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி, மத்திய அரசுக்கு வலுவான கண்டத்தை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.