

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு திடீரென சென்று, ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மேலும் அந்த மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது, அழகியமணவாளபுரம் கிராமத்தை சேர்ந்த தவசீலன் என்பவர், நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளி உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என்று அமைச்சரிடம் கூறினார். அப்போது அமைச்சர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை புதிய திட்டம் பற்றி தெரியுமா? என்று கேட்டபோது, தவசீலன் தெரியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து தவசீலனுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.