

சென்னை,
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக அரசுக்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்தனர். இதனால் அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல் அதிகரித்தது.
சட்டமன்றத்தில் ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு தவெக அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், தவெக அமைச்சரவையில் இவர்களுக்கான இடம் மறுக்கப்பட்டது. இதனால் எஸ்பி வேலுமணி தரப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே எஸ்பி வேலுமணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாக வந்த செய்திகள் குறித்து, பதவிக்கு ஆசைப்பட்டு எங்களின் ஆதரவை த.வெ.க அரசுக்கு அளிக்கவில்லை.
திமுக-விற்கு எதிரான நம் கழகத்தின் தொடர் நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாகவே த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு அளித்தோம் என்று தெளிவுபடுத்திவிட்டோம்.
திமுக-வால் இயக்கப்படும் அரசாக த.வெ.க அரசு இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அம்மா அரசின் பார்போற்றும் திட்டங்களான அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக், அம்மா குடிநீர், குடிமராமத்து திட்டம் ஆகியவை தொடரவும், கழக ஆட்சியின் 7.5% மருத்துவ உள் இடஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்த வேண்டும் 125 நாட்களாக உள்ள 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய செயல்திட்டக் கோரிக்கைகளை இன்றைய அரசிடம் சமர்ப்பித்தும், அதன் அடிப்படையிலான ஆதரவையே கழகத்தின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்தனர்.
மக்களுடைய தீர்ப்பு என்பது த.வெ.க மீதான ஆதரவாக அமைந்து இருந்ததை மதித்துதான் எங்களுடைய ஆதரவை அளித்தோம். திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் தாங்களும் உறுதியாக இருப்பதாக த.வெ.க தரப்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.
ஆட்சிக்கு ஆதரவு என்பது மட்டுமே எங்கள் நிலைப்பாடே தவிர்த்து, அமைச்சரவையில் பங்கு என்பது நாங்களும் ஒருநாளும் அவர்களிடம் கேட்கவில்லை. அதிமுகவினர் அமைச்சர் பதவி கோரவில்லை என்று த.வெ.க தரப்பிலும் தெளிவுப்படுத்தி விட்டனர்.
இதை கழக அமைப்புச் செயலாளர் சகோதரர் சி.வி. சண்முகமும், நானும் பலமுறை செய்தியாளர் சந்திப்பு வாயிலாகவும் விளக்கம் அளித்துவிட்டோம்.
ஆனால், தொடர்ந்து பதவி ஆசையால் ஆதரவு என்ற ஒரு முற்றிலும் பொய்யான பிம்பம் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் சில ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படுவது என்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, கண்டிக்கத்தக்க ஒன்று.
கழகம் தழைத்தோங்க வேண்டும் என்பது மட்டும்தான் எந்நாளும் எங்களின் நோக்கம்.
கழகத்தை உடைக்கவோ பிரிக்கவோ, கழகக் கோவிலாம் தலைமைக் கழகத்தைக் கைப்பற்றவோ நாங்கள் ஒருநாளும் எண்ணியதில்லை. ஏனென்றால் இந்த கட்சி தான் எங்களுக்கு உயிர்! இதையும் செய்தியாளர் சந்திப்பு வாயிலாக மிகத் தெளிவாக கூறிவிட்டோம்.
எங்களுடைய கழகப் பொதுசெயலாளர் அண்ணன் எடப்பாடியார் தான். இதை நாங்கள் யாரும் எந்த இடத்திலும் மறுக்கவில்லை. எனவே, எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது; அத்தகைய பரப்புரை எங்களையும், கழகத் தொண்டர்களையும் மன வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.
அதேசமயம், கட்சியின் தொடர் தோல்விகளால் தொண்டர்கள் மிகுந்த சோர்வடைந்து உள்ளார்கள். அவர்களுக்கு சரியான பாதையை காட்டி, கழகம் புத்துயிர் பெற வேண்டும் என்றால், இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து ஜனநாயக ரீதியாக நாம் அனைவரும் ஆலோசிக்க வேண்டும்.
கட்சியில் எல்லோரும் இருக்க வேண்டும்-ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எல்லோரின் எண்ணம்.
தொண்டர்களின் எண்ணத்தை மதித்து, கழகப் பொதுச் செயலாளர் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் அமைத்திடுவோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.