

சென்னை,
தமிழக அரசின் நிதித்துறை அறிவிக்கைப்படி 2021-ம் ஆண்டுக்குரிய 8.50 சதவீத தமிழக அரசு பங்குகள் தொகையின் நிலுவைத் தொகையானது பிப்ரவரி 16-ந்தேதி வரை வட்டித்தொகையுடன் திரும்ப செலுத்தப்படுகிறது. பிப்ரவரி 17-ந்தேதிக்கு பின்னர் இந்த கடனுக்கு வட்டித்தொகை சேராது. அரசு கடன் பத்திரங்களை வைத்திருக்கும் பதிவு பெற்ற நபரின் வங்கி கணக்கில் நிலுவைத்தொகையை செலுத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு முதிர்வுத்தொகை வழங்கப்படும். அரசு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர் வட்டித்தொகையுடன் நிலுவைத்தொகையை செலுத்துவதற்காக வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும்.
வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இல்லாத பட்சத்திலும் மின்னணு பரிவர்த்தனை மூலம் தொகையை வரவு வைப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்படாத பட்சத்திலும் தொகையை திரும்ப செலுத்துவதற்கு ஏதுவாக கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள் பொதுக்கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கப்படும் கடன் பத்திரங்களின் பின்பக்கத்தில், அசல் தொகை பெறப்பட்டது என எழுதி கையெழுத்திட வேண்டும். கடன் பத்திரங்கள் சான்றிதழ் வடிவில் இருக்குமாயின் சம்பந்தப்பட்ட வங்கியின் கிளையில் தான் ஒப்படைக்க வேண்டுமே தவிர கருவூலத்திலோ அல்லது சார் கருவூலத்திலோ ஒப்படைக்கக்கூடாது. பொதுக்கடன் அலுவலகத்துக்கு பதிவு தபால் மூலம் கடன் தொகையை திரும்ப செலுத்த கோரலாம். அவ்வாறு கடன் தொகையை திரும்ப செலுத்தக்கோருவோர், கடன் பொறுப்பை தீர்க்கும் வாசகத்தை பத்திரங்களின் பின்புறம் உரியவாறு எழுதி கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
மேற்கண்ட தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.