

கரூர்,
கரூர் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நவீன குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி. வெங்கடரமணனை, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி சந்தித்து கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் பி. வெங்கடரமணனை சந்தித்து, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் , அதற்குத் தேவையான கட்டிடங்கள் மற்றும் மருங்காபுரி பகுதியில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நவீன குளிர்பதனக் கிடங்கு அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்தேன்.
இந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, இந்த நிதியாண்டிலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். அதற்காக அவருக்கு கரூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்திப்பின்போது, அமைச்சர் "அண்ணாவின் மாபெரும் தமிழ்க் கனவு" நூலை அன்புடன் பரிசளித்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.