சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் படி பூஜை

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் படி பூஜை
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் படி பூஜை
Published on

தமிழ் புத்தாண்டையொட்டி சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் படி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில்

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் தமிழ் ஆண்டுகளை குறிக்க கூடிய பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 படிக்கட்டுகள் 60 பெயர்களை தாங்கி நிற்கின்றது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாதம் 1-ந்தேதி இங்கு உள்ள 60 படிகளுக்கும் பூஜை செய்து பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம்.

படிபூஜை

அதன்படி நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி காலை 6 மணியளவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முக்கிய விழாவான படி பூஜையையொட்டி 60 படிகளுக்கும் சந்தனம் மற்றும் அபிஷேக பொருட்கள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. படி பூஜைகளை காரைக்குடி ஆட்சி என்பவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

நீலகண்ட பிள்ளையார் கோவில்

தமிழ் புத்தாண்டையொட்டி பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் அதிகாலை 4 மணி முதல் சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அப்போது நீலகண்ட பிள்ளையார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பொதுமக்கள், பக்தர்கள் வசதிக்காக கோவிலின் வெளிப்புறத்தில் தகரப்பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

புராதனவனேஸ்வரர் கோவில்

திருச்சிற்றம்பலம் புராதனவனேனஸ்வரர் கோவிலில் நேற்று சாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை சாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளும், நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உப்பு விடுதி கிராம மக்கள் செய்திருந்தனர். அதேபோல் பாலத்தளி துர்க்கை அம்மன் கோவிலில் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com