

குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே முளங்குழி செட்டிச்சார்விளையை சேர்ந்தவர் ராபர்ட் சிம்சன் (வயது 60), பெயிண்டர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்களும் உள்ளனர். ராபர்ட் சிம்சனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று ராபர்ட் சிம்சன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராபர்ட் சிம்சன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.