

திண்டுக்கல்,
பழனி அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அடிவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ் (வயது 56) உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு சார் பதிவாளர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நிலத்தை விற்பனை செய்த ஆசிரியர் முருகதாஸ் (52), நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67), பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் முருகதாஸ் உள்பட 4 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந் தேதிவரை போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.