பழனி கோவில் நிலம் மோசடி வழக்கு: சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளரிடம் சிபிசிஐடி விசாரணை

ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
பழனி கோவில் நிலம் மோசடி வழக்கு: சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளரிடம் சிபிசிஐடி விசாரணை
Published on

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோவில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.

ரூ. 100 கோடி நிலம் - ரூ. 2 கோடிக்கு கிரையம்

இதனிடையே, ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. கோவில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமி மட நிலம் கடந்த 6-ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனியார் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகார்

இந்த முறைகேடு பதிவு குறித்து பழனி அடிவாரம் போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், அதனை வாங்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி அருகே உள்ள டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி என 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த நிலமோசடி வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது ஜாமினில் உள்ளார்.

சிபிசிஐடி விசாரணை

இந்நிலையில், பழனி முருகன் கோவில் நிலமோசடி வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான ஜஸ்டின் மணிகண்டனிடம் நிலமோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com