

காங்கயம்
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 7 வாரங்கள் கிறிஸ்துவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடும் வழக்கம்.
அந்த வகையில் காங்கயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. காங்கயம் - தாராபுரம் சாலை, களிமேடு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து நேற்று காலை குருத்தோலைகளை கையில் ஏந்திய படி நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக ஓசன்னா கீதங்களை பாடிய படி கிறிஸ்துவ மக்கள் பவனியாக வந்தனர். பின்னர் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த குருத்தோலை ஞாயிறு பவனி ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.