

சென்னை,
கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாட்கள் தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெறும். கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி, ஊர்வலமாக செல்வார்கள்.
அதன்படி, இன்றைய தினம் குருத்தோலை ஞாயிறையொட்டி, தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடக்க இருக்கிறது. தென்னிந்திய திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை, இந்திய நற்செய்தி திருச்சபை உள்ளிட்ட தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் அனைவரும் இன்று பாடல் பாடி குருத்தோலை ஏந்தியபடி பவனியாக வருவார்கள்.
இதற்காக ஒவ்வொரு ஆலயங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் சென்னையில் சில இடங்களில் அனைத்து திருச்சபைகளும் ஒருங்கிணைந்து குருத்தோலை ஞாயிறு பவனியாக செல்லவும் திட்டமிட்டு உள்ளனர்.