பரமத்திவேலூர் அருகே திடீரென லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பரமத்திவேலூர் அருகே அட்டை பெட்டிகள் தயார் செய்யும் இயந்திரங்களை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பரமத்திவேலூர் அருகே திடீரென லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

பரமத்திவேலூர்,

சிவகாசி, நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி.இவரது மகன் மணீஸ்வரன்(வயது 26).லாரி டிரைவர்.இவர் பெங்களூரில் இருந்து சிவகாசிக்கு அட்டை பெட்டிகள் தயார் செய்யும் இயந்திரங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு நேற்று இரவு நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் உதவியாளர் சபரிநாதன் (22) என்பவர் உடன் வந்தார்.

அப்போது ,பரமத்திவேலூர் பிரிவு சாலை அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்த லாரி டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் லாரியில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பினர்.

இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் இருந்த பேக்கரி மற்றும் பெட்ரோல் பங்கில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேலாயுதம்பாளையம் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இருப்பினும் லாரியில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான அட்டை பெட்டிகள் தயார் செய்யும் மூன்று இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

லாரியில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com