கல்லூரி படிப்பை தொடர அறிவுறுத்திய பெற்றோர்: மாணவர் எடுத்த விபரீத முடிவு

கல்லூரியில் தொடர்ந்து படிக்க விருப்பமில்லை என்று மாணவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள ஆதனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆதிலிங்கம். விவசாயி. இவரது மனைவி விஜி. இவர்களுக்கு லிங்கதுரை (19 வயது), சுரேந்திரர் ஆகிய 2 மகன்களும், சுமித்ரா என்ற மகளும் உண்டு. இதில் லிங்கதுரை நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மொகரம் பண்டிகை விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது, கல்லூரியில் தொடர்ந்து படிக்க விருப்பமில்லை என்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நீ விருப்பப்பட்ட கல்லூரியில் தான் நாங்கள் சேர்த்து உள்ளோம். கல்லூரி படிப்பை நீ தொடர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இதை மறுத்த அவரிடம், கல்லூரிக்கு சென்று படிக்குமாறு பெற்றோர் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.

இதில் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று அதிகாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நீண்டநேரமாக அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை தேடியபோது, சுடுகாட்டு பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் லிங்கதுரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலின் பேரில் எப்போதும்வென்றான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தில் தொங்கி கொண்டிருந்த அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com