

வேலூர்,
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருடைய மூத்த மகள் காவியா பொய்கை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காவியாவிற்கு பிறந்தநாள் என்பதால் பல்வேறு இடங்களுக்கு சென்று நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி வந்தார்.
இது சம்பந்தமாக பெற்றோர்கள் காவியாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காவியா நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். திருநாவுக்கரசு மற்றும் அவரது மனைவி ஜோதிலட்சுமி மற்றும் 2 பெண் குழந்தைகளும் வெளியே சென்றிருந்தனர்.
இந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த காவியா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடு திரும்பிய திருநாவுக்கரசு மகள் காவியா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காவியாவை தூக்கில் இருந்து மீட்டபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருநாவுக்கரசு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காவியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.