யானை தந்தத்தால் ஆன சிற்பத்தின் பாகம் கண்டெடுப்பு

யானை தந்தத்தால் ஆன சிற்பத்தின் பாகம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
யானை தந்தத்தால் ஆன சிற்பத்தின் பாகம் கண்டெடுப்பு
Published on

மீன்சுருட்டி:

அகழாய்வு பணி

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது. இந்த பணியின்போது கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி பழங்கால தங்கக்காப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மார்ச் 25-ந்தேதி பழங்கால மண்பானை, மண்ணாலான கெண்டி செம்பின் மூக்குப்பகுதி மற்றும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனையின் தொடர்ச்சியாக 22 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் கண்டுபிடிக்கப்பட்டது.

சோழர்களின் கலையை பின்பற்றி...

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம், யானை தந்தத்தால் ஆன மனித உருவ சிற்பத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பத்தின் பாகம் இடுப்பின் கீழ் பகுதியில் இருந்து கால்கள் வரை உள்ளது. அதன் உயரம் 1.8 செ.மீட்டரும், அகலம் 1.5 செ.மீட்டரும், இதன் எடை 1 கிராம் 100 மில்லி அளவிலும் உள்ளது.

சோழர்களின் கலையை பின்பற்றி, அக்காலத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள் போன்ற அமைப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த மாதத்துடன் நிறைவு

இதுவரை இந்த அகழ்வாராய்ச்சி பணியில் கிடைத்த பழங்கால பொருட்களில் சீன மண்பாண்டங்கள், செப்பு நாணயங்கள் மற்றும் செம்பு பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் ஆகியவையும் அடங்கும். மேலும் தொடர்ந்து நடைபெறும் அகழாய்வு பணியில் பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், இந்த ஆய்வு பணி இந்த மாதம் இறுதிவரை நடைபெறுவதாகவும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com