நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் இலங்கையின் காங்கேசன்துறைக்கு கப்பல் புறப்பட்டது.
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
Published on

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. வானிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 18-ந் தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மீண்டும் கப்பல் போக்குவரத்து கடந்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் நீடித்து வந்ததால் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பிரச்சினைகள் அனைத்துக்கும் விரைவில் தீர்வு காணப்பட்டு கப்பல் சேவை தொடங்கப்படும் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நாகை மற்றும் இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து 22-ந் தேதி (சனிக்கிழமை) மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து இரண்டரை மாதங்களுக்கு பிறகு இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் இலங்கையின் காங்கேசன்துறைக்கு கப்பல் புறப்பட்டது.

நாகை-இலங்கை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் கப்பல் போக்குவரத்து நடைபெறும். பயணிகள் www.sailsubham.com என்ற இணையதளத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச்செல்லலாம். கூடுதலாக உடைமைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com