மதுரை விமான நிலையத்தில் திரண்ட பயணிகள்

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் ஆர்வத்தில் தனியார் ஏஜென்சியின் தகவலை நம்பி மதுரை விமான நிலையத்தில் திரண்ட பயணிகளுக்கு ஏமாற்றமே கிடைத்ததால், அவர்கள் வீடு திரும்பினர்.
மதுரை விமான நிலையத்தில் திரண்ட பயணிகள்
Published on

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் ஆர்வத்தில் தனியார் ஏஜென்சியின் தகவலை நம்பி மதுரை விமான நிலையத்தில் திரண்ட பயணிகளுக்கு ஏமாற்றமே கிடைத்ததால், அவர்கள் வீடு திரும்பினர்.

விமான நிலையத்துக்கு வந்த பயணிகள்

துபாய், குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் பணிபுரிவதற்காக கோவாவில் உள்ள தனியார் ஏஜென்சி நிறுவனம் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஆட்களைத் தேர்வு செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களை மதுரையில் இருந்து கோவாவிற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு பணிக்கு அனுப்புவதற்கு அந்த நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்தனராம். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மதுரையில் இருந்து அனைவரையும் அழைத்துச் செல்லப்படுவீர்கள் எனக்கூறியிருந்ததாம். இதனை நம்பி 50-க்கும் மேற்பட்டோர் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்தனர். டிக்கெட் இல்லாததால் அவர்களை விமான நிலைய ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். விமான நிலைய ஊழியர்களிடம் தாங்கள் கோவா செல்வதற்காக ஆன்லைன் மூலம் புக் செய்துள்ளோம் எனக்கூறியுள்ளனர்.

திருப்பி அனுப்பினர்

மதுரையில் இருந்து நேரடியாக கோவாவிற்கு எந்தவித விமானமும் இல்லாத நிலையில் சிறப்பு விமானம் மூலம் பயணிகளை கோவா அழைத்துச் செல்வதாக அவர்கள் கூறியதையடுத்து விமான நிலைய ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் வளைகுடா நாட்டில் பணிபுரிவதற்காக கோவாவில் உள்ள ஏஜென்சி நிறுவனம், மதுரை விமான நிலையத்திற்கு வருமாறு தங்களை கூறியதால் இங்கு வந்ததாகவும் ஏற்கனவே 50 பேர் கோவாவில் உள்ளதாகவும், அவர்களுடன் சேர்ந்து வளைகுடா நாடுகளுக்கு பணியாற்ற பயணிப்பதற்காக மதுரை விமான நிலையம் வந்ததாக கூறினர். இதனை தொடர்ந்து அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் திருப்பி அனுப்பினர். வெளிநாடு செல்லும் கனவுடன் தனது உறவினர்களுடன் விமான நிலையம் வந்த 100-க்கும் மேற்பட்டோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது, மதுரையில் இருந்து கோவாவுக்கு நரடியாக விமான போக்குவரத்து இல்லை. மதுரையில் இருந்து மும்பை சென்று அங்கிருந்து கோவா செல்லலாம். 1-ந்தேதி மும்பை புறப்படுகிற விமானத்தில் செல்வதற்காக இன்று(அதாவது நேற்று) ஏராளமான பயணிகள் திரண்டு வந்து விட்டனர். அவர்களை திருப்பி அனுப்பி விட்டாம் என்றனர்.

இந்த சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com