

காரியாபட்டி,
காரியாபட்டியில் இருந்து விருதுநகருக்கு இரவு 9 மணிக்கு மேல் பஸ்கள் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பஸ் வசதி
காரியாபட்டியில் இருந்து விருதுநகருக்கு செல்லும் பஸ்களில் வக்கணாங்குண்டு, கரியனேந்தல், தோனுகால், கல்குறிச்சி, வலையங்குளம், சந்திரங்குளம், மல்லாங்கிணறு, வரலொட்டி, வில்லி பத்திரி உள்பட 20 கிராமங்களுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
காரியாபட்டியில் இருந்து விருதுநகருக்கு இரவு 9 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லாததால் கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியூர்களில் சென்று வேலை செய்து வருகின்றனர். இவர்கள் மதுரை, திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதற்கு நேரம் ஆகிவிடுகிறது.
அதிகாரிகள் நடவடிக்கை
ஆனால் பல்வேறு ஊர்களில் இருந்து வேலைக்கு சென்று விட்டு காரியாபட்டி பஸ் நிலையத்திற்கு 9 மணிக்கு வந்தால் தான் விருதுநகர் வழியாக செல்லும் ஊர்களுக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.
இரவு 9 மணிக்கு மேல் பஸ் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். காரியாபட்டி பஸ் நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் காரியாபட்டிக்கு செல்ல கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.