

சென்னை,
சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு;
”இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் (வயது 78) இன்று உடல்நலக் குறைவால் சிவகங்கையில் காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை தருகிறது. இ.எம்.சுதர்சன நாச்சியப்பனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஏரியூர் ஆகும். அவர் எம்.ஏ., பி.எல்., படித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.
அவர், 1999 முதல் 2004 வரை சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினராகவும், 2004 முதல் 2016ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் 2013 முதல் 2014ம் ஆண்டு வரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
சுதர்சன நாச்சியப்பன் சமூக நீதியில் மிகுந்த அக்கறையும், ஈடுபாடும் கொண்டவர். இந்தியா சார்பில் ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் இரண்டு முறை பேசியிருக்கிறார். ஐ.நா சபையின் அமைதிக்கான முன்னெடுப்புகள், உலகமயமாக்கல் ஆகியவை தொடர்பாக உரையை நிகழ்த்தியுள்ளார்.
அவரது மறைவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.