மூத்த படைப்பாளி பூமணி மறைவு - சிபிஐ(எம்) இரங்கல்

மார்க்சியத்தையே தன் வாழ்க்கை கண்ணோட்டமாக கொண்ட இடதுசாரி சிந்தனையாளராக வாழ்ந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ. சண்முகம்
Published on

சென்னை,

மூத்த படைப்பாளி பூமணி மறைவு - சிபிஐ(எம்) இரங்கல். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சாகித்திய அகாடமி விருது

சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழின் மூத்த படைப்பாளி பூமணியின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. கரிசல் வட்டார மக்களின் வாழ்வியலை, குறிப்பாக பட்டியலின மக்களின் வாழ்க்கையை, அழுத்தமான குரலில் பதிவு செய்த பூமணியின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம் பெற்றவை.

சாதி எதிர்ப்புணர்வு

அஞ்ஞாடி நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர், மார்க்சியத்தையே தன் வாழ்க்கை கண்ணோட்டமாக கொண்ட இடதுசாரி சிந்தனையாளராக வாழ்ந்தார். அவரது எழுத்துக்களில் வெளிப்பட்ட சாதி எதிர்ப்புணர்வும், உழைக்கும் மக்கள் மீதான அவரது நேசமும் ஒரு முற்போக்கு படைப்பாளிக்குரிய பண்பாகும். தமிழின் இந்த மகத்தான படைப்பாளியை இழந்திருப்பது தமிழ் இலக்கிய உலகிற்கும், முற்போக்கு சிந்தனைப் பரப்பிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

தோழர் பூமணி மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும். இலக்கிய நேசர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com