முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தல்

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது. பசும்பொன்னில் இன்று (வியாழக்கிழமை) தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
இன்றைய தினம் 118-வது தேவர் ஜெயந்தி விழாவை விழாவை முன்னிட்டு அதிமுக சார்பாக நானும் எங்கள் மூத்த தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மர்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவர் ஐயாவின் நினைவிடத்தில் மலர் தூவி புகழஞ்சலி செலுத்தி உள்ளோம்.
எம்ஜிஆர் முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தேவர் பெருமகனார் ஜெயந்தி விழாவை அரசு தரப்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் தெய்வத் திருமகனார் தேவர் ஐயா . புரட்சித் தலைவர் அவர்கள், தேவர் ஐயாவுக்கு புகழ் சேர்க்கும் விதமாக சட்டமன்ற வளாகத்தில் அவரது முழு உருவப்படத்தை திறந்தார்.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது சுமார் 13 கிலோ தங்கத்தில் தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு தங்க்க் கவசம் சாத்தினார்.தேவர் ஐயா தன் வாழ்நாளில் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சுமார் 4,000 நாட்கள் சிறையில் இருந்தவர். அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தேர்தல் முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தல் ஆகிய 2 தேர்தல்களிலும் போட்டியிட்டு வென்று மக்கள் செல்வாக்கை நிரூபித்து காட்டியவர்.
அவர் வாழ்ந்த காலத்தில் தனக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்கும், பட்டியலின மக்களுக்கும் பிரித்துக் கொடுத்து ஏழைகளை வாழவைத்த கொடை வள்ளலாக திகழ்ந்தவர். அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று, அதிமுக சார்பாக மத்திய உள்துறை அமைச்சரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம்.
அவர் தேசிய தலைவராக விளங்கியவர், மக்களுக்காக பாடுபட்டவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். தேசத்துகாக பாடுபட்ட அவருக்கு அனைவரும் சேர்ந்து புகழ் சேர்ப்பது பெருமைக்குரியது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.






