

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஒட்டை கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 41), விவசாயியான இவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய, ஒட்டை கிராம நிர்வாக அலுவலரான கலைச்செல்வியை (45) அணுகினார். அதற்கு அவர், பட்டா மாற்றம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டுமெனில் ரூ.8 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதுபற்றி பிரபு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
பின்னர் போலீசார் கூறிய அறிவுரைப்படி பிரபு கடந்த 17 -ந் தேதியன்று ரசாயன பொடி தடவிய லஞ்சப் பணத்தை எடுத்துக்கொண்டு வானூர் தாலுகா அலுவலகம் சென்று அங்கிருந்த கலைச் செல்வியிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது கலைச்செல்வியை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்பொருட்டு அவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.